இராஜ்குமார் ஆறுமுகம்
arajkumartamil88@gmail.com
arajkumartamil88@gmail.com
முகவுரை
உலகின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனித்தன்மையான பண்புகள் உள்ளன. அதன்படி நம் பாரத பூமியில் பல்வேறுபட்ட கலாச்சாரங்கள் காணப்படுகின்றது. அவற்றிலும் தமிழர் வாழ்வு பல்வேறு சடங்குகள் நம்பிக்கைகள் வழிபாடுகள் திருவிழாக்கள் எனும் வாழ்வில் முறைகளைக் கொண்டது. தகடூர் பூமியில் காணப்படும் இறை வழிபாடு திருவிழாக்கள் பற்றி விரிவாக காண்போம்.மாரியம்மன் வழிபாடு
மாரியம்மன் வழிபாடு பன்னெடுங்காலமாக இம்மண்ணில் நடத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி பகுதியில் நான்கு விதமான வழிபாட்டு முறைகளைக் காணமுடிகிறது. ஒன்று சிவன் திருமால் எனும் பெருந்தெய்வ வழிபாடு, இரண்டு தத்தம் குல தெய்வ வழிபாடு, மூன்று மண்டு வழிபாடு மற்றும் ஊர் பொது மாரியம்மன் வழிபாடு எனும் நான்கு முறையும் இங்குள்ள அனைத்து மக்களின் வாழ்வியலுடன் அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இவற்றில் குலதெய்வம் மட்டுமே தனியாக செய்யக் கூடியதாகவும் மற்ற வழிபாடுகள் அனைத்தும் ஊர் பொதுவாக செய்யப்படும் விழாவாக காணப்படுகிறது.மாரியம்மன் வழிபட பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவையாவன மழை வேண்டி நிகழ்த்தப்படுவது; மழை என்பதை பண்டைய காலத்தில் மாறி என்றும் அழைத்துள்ளனர் ஆதலால் மாரியம்மன் எனும் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. கண்ணகி வழிபாடு இது சிலப்பதிகார கதையுடன் தொடர்புடையதாக உள்ளது. கோடைக்காலங்களில் வெப்ப மிகுதியால் உடலில் ஏற்பட்ட கொப்புளங்களால் மக்கள் அதிகம் துன்புற்றனர்: ஆதலால் மழை வேண்டியும் நோயிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டிய மழைகால தெய்வத்திடம் வேண்டினர்
இது பிற்காலத்தில் அனைத்து தரப்பட்ட மக்களால் கொண்டாடப்படும் மாரியம்மன் வழிபாடாகியது.
தகடூர்ப் பகுதியில் ஒவ்வொரு சமூக தலைவர்களும் ஒன்று கூடி திருவிழா நாளை முடிவு செய்வார்கள். மாரியம்மன் வழிபாடு பெரும்பாலும் வன்னியர் குல சத்ரியர் தலைமையிலும் சில இடங்களில் வேளாளர்கள் மற்றும் நாயக்கர்கள் தலைமையிலும் நிகழ்த்தப்படுகிறது. நாள் குறிக்கப்பட்டு கொடிக்கம்பம் நடவு செய்யப்படுகிறது. அன்றிலிருந்து மக்கள் தீட்டு இல்லாமல் விரதம் இருந்து வருகின்றனர். கங்கணம் கட்டியவர்கள் மட்டுமே சாமி சிலையை தொட்டு தூக்கி வணங்க முடியும். மற்றவர் எவராயினும் அவரை தொட்டு வணங்க அனுமதிப்பதில்லை. மாரியம்மன் திருவிழாவில் பல தெய்வங்களின் வழிபாடும் கலந்துள்ளது. புதன்கிழமை மாவிளக்கு தட்டு எடுக்கப்பட்டு பின்பு ஆடு பலியிடப்படுகிறது. அனைவருக்கும் விருந்து அளிக்கப்படுகிறது ஊர்மக்கள் ஒன்றுகூடி புதன்கிழமை அன்று மாரியம்மன் கரகம் எடுத்து தீக்குண்டத்தில் இறங்குகின்றனர் ; அந்த நிகழ்வின் போது நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது. பேயோட்டும் நடத்தபடுகிறது இந்த குண்டத்தின் சாம்பல் நிலத்தில்யிட்டால் அதிக விளைச்சல் வரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மாரியம்மனின் வேறு பெயர்களாக முத்துமாரி, ஊர் மாரியம்மன், கருமாரியம்மன் காட்டு மாரியம்மன், புதூர் மாரியம்மன் கோட்டை மாரியம்மன், என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மாசி மாதம் தொடங்கி ஆடி மாதம் வரை மாரியம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.
முனியப்பன் வழிபாடு
முனியப்பன் திருவிழா தமிழர்களின் மிகமிகத் தொன்மையான வழிபாடுகளில் ஒன்று. கிராமத்தின் வெளியே வயல்களின் நடுவே உயரமாகவும் கம்பீரமாகவும் கையில் கத்தியுடனும் குதிரைகளுடனும் காட்சி தருகிறார். தமிழர்களின் தொன்மையான ஆசீவகத்தின் குறியீடாக முனியப்பன் வழிபாடு உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த இறைவனாக இப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. கோழி ஆடு பன்றி எனும் மூன்றும் முனியப்பன் விழாவில் பலியிடப்படுகிறது. ஞாயிறு செவ்வாய் இரு தினங்களும் முனியப்பனுக்கு உரியதாக உள்ளதை காணமுடிகிறது. தருமபுரி பகுதியில் முனியப்பன் கோவில் இல்லாத ஊர் மற்றும் நிலத்தை காணயிலாத அளவிற்கு மக்கள்்வாழ்வில் முனியப்பன் வழிபாடு கலந்துள்ளதை அறியமுடிகிறது.மண்டு வழிபாடு
தகடூர்ப் பகுதியில் நில உரிமையாளர்களுக்கும் நிலத்தில் வேலை செய்பவர் களுக்கும் இடையே நிகழ்த்தப்படும் ஒரு வழிபாடாக இந்த மண்டு வழிபாடு பார்க்கப்படுகிறது. வன்னியர் குல சத்திரியர்கள்,வேளாளர்கள்,பறையர்கள் எனும் இம்மூன்று சமூக மக்களும் இணைந்து வழிபாடு செய்கின்றனர். செல்லியம்மன் வேளாளர் கரகமாகவும் சாக்கியம்மன் பறையர் கரகமாகவும் மற்றவை வன்னியர் குல சத்திரியர்கள் கரகமாகவும் கரகம் எடுத்து விழா கொண்டாடுகின்றனர். இவ்விழா மூன்று சமூக ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட விழாவாக தான் அறியப்படுகிறது.மண்டு விழா 18 ஊர்களுக்கும் தலைமையாக உள்ள ஊரில் நிகழ்த்தப்படுகிறது இந்த திருவிழாவில் தேர்த்திருவிழா பிரம்மாண்டமாக செய்யப்படுகிறது. விழாவின் தொடக்கமாக கொடி மரம் நடப்படுகிறது பின் அனைத்து உறவினர்களுக்கும் செய்தி சொல்லப்படுகிறது. பொன்னியம்மன் செல்லியம்மன் முதன்மை தெய்வங்களாகவும் ஊர் மாரி எல்லை மாரி ஊர் முனியப்பன் முனியப்பன் என பல தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படுகிறது திருவிழாவின்போது தம் வீட்டில் பிறந்த பெண்குழந்தைகளுக்கு சிறப்பு செய்தல் நடக்கிறது புது துணியுடன் சிறப்பு விருந்து மற்றும் நகைகளும் வழங்கப்படுகிறது. இதை இன்றும் காணமுடிகிறது. திருவிழாவில் ஆடு கோழி பலியிடப்படுகிறது ஊர் சார்பாக எருமை பலியிடப்பட்டு பறையர் சமூகத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடைபெறுகிறது. மேலும் இவ்விழாவில் அனைத்து வகையான சந்தை பொருட்களும் வியாபாரம் செய்யப்படுகிறது ஆடுமாடுகள் சந்தை செய்யப்படுகிறது சில இடங்களில் திரொளபதி அம்மன் வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருவதை காணமுடிகிறது. பல மன்டுகள் இருப்பினும் சோம்பள்ளி மன்டு ஆலமரத்துப்பட்டி மன்டு போன்றவைகள் சான்றாதாரங்கள் ஆக காட்டலாம்.