சனி, 9 டிசம்பர், 2023

அதிய(க)மான்களின் சான்றுகள்

வில்_கல்வெட்டு.. சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சிசெய்த அதியமான்களை "சேர வம்சத்தவர்கள்" என திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் திருமலை கல்வெட்டும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள லட்டிகம் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. "ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா" (சமஸ்கிருதப்பகுதி, திருமலை கல்வெட்டு) ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி" "வஞ்சியர் குலபதி எழினி"(தமிழ்ப் பகுதி, திருமலை கல்வெட்டு) "கேரள அரசன் அதிகேந்திர வ்யாமுக்த ஸ்ரவனோஜ்வலன்" (சமஸ்கிருதப் பகுதி, லட்டிகம் கல்வெட்டு) "சேரனதிகன் திருநெடுமால் தென்தகடை வீரன் விடுகாதழகியான் பாரளந்து செங்கோடுபோலச் சிலையை வடதிக்களவுங் கங்கொட வெட்டினான் கல் மேதினி நீர் வேண்டில் விடுகாதழகியான் கோதில் புகழதிகன் கோயாற்றூராதி வடவிருங் கோளீச்சரத்தில் வைத்த சிலை மார்பிலிட விருங்கொள மன்னரிசைந்து" (தமிழ்ப் பகுதி, லட்டிகம் கல்வெட்டு) மேற்குறிப்பிட்ட "திருமலை" மற்றும் "லட்டிகம்" கல்வெட்டுகள், மழவர் குல அதியமான் மன்னர்களை சமஸ்கிருதத்தில் "கேரள அரசர்கள்" என்றும் தமிழில் "சேர மன்னர்கள்" என்றும் தெரிவிக்கின்றன. மேலும் அவர்களை "வஞ்சியர் குலபதி" (சேர வம்சம்) என்றும் "எழினி" என்றும் "விடுகாதழகியான்" என்றும் தெரிவிக்கின்றன. ஆந்திர மாநிலம், #சித்தூர் மாவட்டம், புங்கனூருக்கு அருகில் இருக்கும் லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் கல்வெட்டு, அதியமான் விடுகாதழகிய பெருமாளை :- "திருமால் போன்ற அவன் வடதிசைக்குச் சென்று தன்னுடைய சின்னமான வில்லை பொறித்தான்" என்று தெரிவிக்கிறது. அக்கோயிலில் பல இடங்களில் தங்களது குலச் சின்னமான "வில்" சின்னத்தை மேடையில் அமர்த்தி, அதன் இருபுறங்களிலும் சாமரம் வீசுவது போலவும், அவ் "வில்லின்" சிற்பத்தின் மீது வெண்கொற்றக் குடையையும் அதியமான் விடுகாதழகிய பெருமாள் பொறித்துள்ளார். (#புகைப்படம் காண்க) இதன் மூலம் "மழவர் குல அதியமான்கள்", வில்லவர்களான சேரர்களின் வழித்தோன்றல்கள் என்பது முடிவாகிறது.
சோழர் காலக் கல்வெட்டுகளில் அதியமான் மன்னர்கள் தங்களை "தகடையர் காவலன்" என்றும் "தகடை மன்னன்" என்றும் "தகடை வீரன்" என்றும் குறிப்பிட்டனர். தகடூரை (தர்மபுரி) ஆண்ட காரணத்தினால் தங்களை அவ்வாறு குறிப்பிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில், பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை "தகடாதராயன்" என்று குறிப்பிட்டனர். அதாவது தங்களை "தகடூர் அதியரையன்" என்று குறிப்பிட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், முழுவனப்பள்ளி என்ற ஊரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :- "ஸ்வஸ்திஸ்ரீ கா சம்வற்சரத்து குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாத. . . னான சேரமான் பெருமாளேந்" இதைப்போலவே, தருமபுரி மாவட்டம், அத்திமுட்லு என்ற ஊரில் உள்ள கல்வெட்டும், மேற்குறிப்பிட்ட முழுவனப்பள்ளி கல்வெட்டின் செய்தியையே குறிப்பிடுகிறது. அது :- "ஸ்வஸ்திஸ்ரீ கார சம்வற்சரத்து குலோத்துங்க சோழ தகடாதராயந் விடுகாதழகிய பெருமாளான சேரமான் பெருமாளேந்" மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகளில், தகடூர் அதியரையன் விடுகாதழகிய பெருமாள் அவர்கள், "சேரமான் பெருமாள்" என்று மிகத் தெளிவாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் குறிப்பிடப்படுகிறார். வெண்பா_கல்வெட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகில் உள்ள குந்துகோட்டையில் 13 ஆம் நூற்றாண்டில் தகடூரை(தருமபுரி, கிருஷ்ணகிரி) ஆட்சி செய்த ,அதியன் மரபை சேர்ந்த விடுகாதழகிய பெருமானின் கல்வெட்டை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. ஆய்வு மைய குழு, மற்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் திரு.இரா.பூங்குன்றன், திரு.தி.சுப்பிரமணி, திரு.வீரராகவன், அறம்கிருஷ்ணன், ப்யாரீப்ரியன், மஞ்சுநாத், சீனிவாசன், கணபதி, ஆகியோர் ஒன்றிணைந்து குந்துகோட்டையில் இருக்கும் கல்வெட்டை ஆய்வு செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனியிலிருந்து அஞ்செட்டி போகும் சாலையில் குந்துகோட்டை வருகிறது.இங்கு உயரமான மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகளில் இரண்டு கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளை குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் பல புதிய தகவல்களை தெரிவித்து பத்திரிக்கையாளர்களிடையே பதிவு செய்துள்ளனர். இக்கல்வெட்டு கி.பி.13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கல்வெட்டின் மேல் பகுதியில் ஒரு பீடம் அமைக்கப்பட்டு பீடத்தின் மேல் இரண்டு அடி உயரத்திற்கு வில் வரையப்பட்டுள்ளது. வில்லுக்கு மேல் பகுதியில் வெண்கொற்றக் குடை காட்டப்பட்டு உள்ளது.வலது பக்கம் சாமரம் மற்றும் குத்து விளக்கும்,அதே போல் இடது பக்கமும் சாமரம் மற்றும் குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது. பீடத்திற்குக் கீழ் இடது பக்கம் ஒரு முக்காலியின் மேல் கெண்டி வைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் முதல்நான்கு வரிகள் கிரந்த எழுத்திலும், கன்னட மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு வரிகள் தமிழ் வெண்பா பாட்டு வடிவில் அமைந்து உள்ளது. இக்கல்வெட்டு ஸ்வஸ்த ஸ்ரீ என்று தொடங்கவில்லை. நேரடியாக அதியனின் புகழ்பாடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த வெண்பா வடிவிலான கல்வெட்டு வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன. ~~~~~~~~~~~~~~~~ “பண்டோரு...க்குடித்தாழ வடுக பாவைர் தங் கண்டோர் நின்றோழகக் காய்ந்ததே-விண்டோயுங் குன்றால் நிரைகாத்த கொற்றக்குடை யதிகன் வென்றாரை வென்றான் கைவேல்” “போரணிகாட் டியபேயுங் குரங்கும் பொருகளத்துக் கோரணிகாட்டுங்கொடியல்லவே கொங்கர் மங்கையர் கண்ணிரனி காட்டிட பொருந்தோளதி கன்நிலம் காட்டுக்குச்சியுண் காட்டுக திருக்கொற்றவீரச் சிலைக் கொடிக்கே.” ~~~~~~~~~~~~~~~~ இதன் பொருள். பண்டையக்குடிகளுக்கு இடையில் போர்நடந்த போது குரங்கும் ,பேயும் கொடிகளை எடுத்துச் சென்றன.அந்தக் கொடிகள் எல்லாம் கொடிகள்அல்ல,. ஆனால் குன்றால் ஆநிறைகளைக் காத்த போருக்குரிய சிறந்த தோள்களை உடையவனும், மலையைத் தூக்கி ஆநிறைகளைக் காத்தவனுமான அதியனுடைய வில் கொடியே புகழில் உயர்ந்தது.போர் அணியாகசென்ற படை வகுப்பில் பேயும் குரங்கும் போர்க் கொடியை எடுத்து சென்றன.இந்த கொடிகள் புகழ்மிக்க கொடிகள் என்று சொல்ல முடியாது.தேன் நிறைந்த மலர் சூடிய கண்ணீரைப் போக்கும் வலிமை படைத்த அதியமானுடைய வெற்றி மிக்க வீரர்கள் எடுத்து சென்ற கொற்ற வில் கொடிக்கே புகழ் உரியது. இந்த கல்வெட்டின் சிறப்பு இப்பாடல்களில் வில்லை பற்றி புகழ்ந்து பாடப்படுகின்றது. பொதுவாக வில் சின்னம் பண்டைக்கால சேர மன்னர்களுக்கு உரியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் இப்பாடலில் அதியமானுக்குரியதாக வில் கொடி கூறப்படுகிறது.மேலும் அதியமான்கள் சேரமரபினர் இனக்குடிகள் என்று கருதப்படுகிறது. இவர்கள் சேரர் கொடிக்குரியவர்கள் என்பதை திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் திருமலை என்ற ஊரிலுள்ள சமண பள்ளியில் விடுகாதழகிய பெருமான் என்ற பிற்கால அதியமான் வஞ்சியர் குலபதி எழினி மரபில் வந்தவனாக கூறுகின்றது. இது அவர்கள் சேரமரபினருக்குரியவர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.திருமலைக் கல்வெட்டும் பாடல் வடிவில் அமைந்துள்ளது. இச்செய்தி வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளது. விடுகாதழகிய பெருமாளின் பாடல் வடிவில் அமைந்திருப்பது மேலும் பல கல்வெட்டுகளில் தெரியவருகின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த கம்பைநல்லூரின் பாடல் கல்வெட்டில் பார்க்கலாம். வடமொழியிலும்,தமிழ் மொழியிலும் தேர்ந்தவர் என்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. இக்கல்வெட்டு விடுகாதழகிய பெருமான் என்று பெயரை கூறவில்லை என்றாலும் பாடல் மொழியில் தமிழ் மொழியும் ,கன்னட மொழியும் , பயன் படுத்தப்பட்ட தன்மை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. திருமலைக் கல்வெட்டில் வடமொழியும் குந்து கோட்டை கல்வெட்டில் கன்னடமும் பயன்படுத்தப்பட்டதற்கு காரணம் இருந்திருக்க வேண்டும். திருமலையில் சமஸ்கிருதம் தெரிந்த சமண முனிவர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் தமிழக கல்வெட்டை சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்திருக்கலாம். அந்த சமஸ்கிருதக் கல்வெட்டு சார்தூலம் என்ற பாட்டுவகையைச் சார்ந்தது.இந்தக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள கன்னட வாசகம் செய்யுள் வடிவில் இருக்க வாய்ப்புள்ளது. வில்கொடி இப்பாட்டில் குறிக்கப்படும் வில் மேலும் சிற்பவடிவில் அமைக்கப்பட்டுள்ள வில் ஆகியவை வில் அதியமானுக்குரியது என்பதை வலியுறுத்துகின்றது.பொதுவாக வில்கொடி சேரர்களுக்குரியதாக கருதப்படுகிறது.சங்க காலத்தில் வெளியிடப்பட்ட #கொல்லிப்புறை என்ற நாணயத்திலும் வில் தனியாகக் காட்டப்பட்டுள்ளது.. மேலும் கரூரில் கிடைத்த சில் நாணயங்களில் பெயர் பொறிக்காமல் வில்லை மட்டும் வரைந்து உள்ளனர். இந்த வில் வில்லோர் என்ற பழங்குடிக்குரிய வில்லாக இருக்கலாம். வில்லோருடைய தலைவன் பிட்டன் கொற்றன் ,சேரமன்னர்களின் படைத் தலைவனாக இருந்தவன் .பாட்டில் கொற்ற வீர சிலைக் கொடி என்ற வாசகத்தில் வரும் கொற்ற என்பது பிட்டன் கொற்றனையும், குறிக்கலாம். இடைக்கால சேரன்கள் பெரும்பாலான காசுகளில் யானையை பொறித்துள்ளார்கள். இதனால் சேர மரபினரின் ஒரு பிரிவினர் யானைக்குலத்தவராக இருந்திருக்கவேண்டும்.ஒரு சேர மன்னனுக்கு “யானைக்கட்சேய் மாந்தரக் சேரர்” என்ற பெயர் வருகின்றது. யானைகட்சேய் என்பது அவன் யானைக் குலத்தை சார்ந்தவனாக இருக்கலாம். வில்லோன் அதிய மரபினர் ஒரே பகுதியில் அடுத்தடுத்து இருந்திருக்கவேண்டும். காலப்போக்கில் இரு குடிகளும் ஒன்றாக இணைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் வில்கொடி அதியமான்களுக்கும் உரியதாகியிருக்கலாம்.மேலும் பிட்டன் கொற்றன் இருந்த கரூர் பகுதியையும் இடைக்கால அதியமான்கள் தங்களின் ஆட்சியின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் கரூர் பகுதியில் தங்கியிருந்த போது வில் கொடி அவர்களுடையதாக இருக்கலாம் .மேலே காட்டப்பட்ட வஞ்சியர் குல பதி என்ற வாசகம் திருமலை வாசகம் அதியமான்களுக்கும் கரூருக்கு உரிய தொடர்பை வலியுறுத்துகின்றது. இந்த அடிப்படையில் வில் கொடி அதியமான்களுக்கு உரியதாகக் காட்டப்பட்டிருக்கலாம். நிரைக்காத்த ஆயன் பொதுவாகப் புராணக்கதைகளில் இந்திரனுக்கும் கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பூசலால் இந்திரன் தொடர்ந்து மழை பெய்ய வைத்து ஆநிரைகளையும்,ஆயர்களையும் அழிக்க முயற்சித்தான்.ஆனால் கிருஷ்ணன் கோவர்தன மலையை தூக்கி ஆயர்களையும் ,கால் நடைகளையும், மழையிலிருந்து பாதுகாத்தான் என்பது புனைமரபு. இந்த புனைமரபினை விடுகாதழகிய பெருமான் உடன் தொடர்புபடுத்தி இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அதிமான் மரபினர் தங்களை திருமால் பக்தர்களாகக் காட்டி கொண்டனர்.அதற்கு சான்றாக நாமக்கல் குடவறையிலுள்ள திருமாலின் உருவங்களைக் குறிப்பிடலாம். இப்பகுதி (தகடூர்)கால்நடை வளர்ப்பில் மேலோங்கி இருந்ததால் கால்நடை வளர்ப்பை பாதுகாத்ததை பெருமைப்படுத்தி ப்ரியமாக காட்டுகின்றது. இப்பாடல் சங்ககாலத்து அதியமான்களும் நிரைகாத்தலிலும் நிரைமீட்டலிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது புலப்படுகின்றது.கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பேடு ஒன்று இந்த மாடுபிடி சண்டைப் பற்றி பேசுகின்றது.இது தருமபுரிக்கு அருகில் உள்ள மலையனூரில் கிடைத்தது.இந்த பின்னணியில் ஆநிரைகளுக்கும், அதியமான்களுக்கும் இடையிலான தொடர்பு புலப்படும்.அதை வலியுறுத்தும் வகையில் குந்து கோட்டையின் கல்வெட்டு சான்றாக புலப்படுகின்றது. 63 சைவ நாயன்மார்களுள் ஒருவரான "சேரமான் பெருமாள் நாயனாரின் வம்சத்தவர்" என்பதை உறுதிப்படுத்துகிறது. சேரமான் பெருமாள் நாயனாரின் சிற்பத்தொகுப்பு உலகப்புகழ் பெற்ற சோழர் கால கோயிலான தாராசுரம் கோயிலில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் சேர அரசர் "ராஜா ராம வர்மா" அவர்கள், 63 நாயன்மார்களுள் ஒருவரான "சேரமான் பெருமாள் நாயனாரை", தங்களது வம்சத்து முன்னோர் என்று குறிப்பிடுகிறார். மேலும் தகவலுக்கு ==================== (1) நற்றிணை - 52. (2) தகடூர் யாத்திரை - 7. (3) S.I.I. Vol-I, No.75. (4) A.R.E, No.547 of 1906 & S.I.I. Vol-XXII, No.547. (5) ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்டிகம் நீலகண்டேஸ்வரர் கோயிலில் உள்ள சேர குல அதியமானின் வில் சின்னம் பொறித்த கல்வெட்டு. (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு தொடர் எண் : 8/1975, பக்கம் - 148. (7) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, கல்வெட்டு தொடர் எண் : 3/1973, பக்கம் - 152. (8) கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் கோயிலில் உள்ள சேரமான் பெருமாள் நாயனாரின் சிற்பத்தொகுப்பு. (9) T.A.S, Vol-V, No.96. (10) வன்னியர் மாட்சி, பக்கம் - 77, தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் ஐயா. (11) S.I.I. Vol-III, No.59. ----- xx ----- xx ----- xx ----- #ப்யாரீப்ரியன் மீள்... https://m.facebook.com/story.php?story_fbid=4496936967055939&id=100002190405617