சனி, 24 ஏப்ரல், 2021

இலக்கியத்தில் நடுகல் வழிப்பாடும் இன்றைய நடுகல் வழிப்பாடும்

ஆ.இராஜ்குமார் ஆய்வியல் நிறைஞர் தருமபுரி 


தமிழ் இலக்கியங்கள் பலவிதமான வழிபாட்டு முறைகளை கூறுகின்றன.அவற்றில் பெருந்தெய்வவழிபாடு மிகவும் சிறப்புபெற்றதாகவும்,அதே அளவில் சிறு தெய்வ வழிபாட்டையும் கூறுகிறது. சிறு தெய்வ வழிபாட்டில் ஒர் அங்கமான நடுகல் வழிபாடு பற்றி தமிழ் இலக்கியம் கூறுவதையும்,இன்றைய நடுகல் வழிபாடு பற்றியும் பார்ப்போம்.

இலக்கியத்தில் நடுகல்

வீரனின் புகழும்  செயற் கரிய செயலும் வரைந்த கருங்கல்லை அவனை புதைத்த இடத்தில்  நட்டு தெய்வமாக வணங்கப்படுவது . அந்த கல்லுக்கு நடுகல்  எனவும் வீரக்கல் எனவும் பெயர்.தொல்காப்பியர் காலத்தில் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடும் வழக்கம் இருந்துள்ளது. சிலபதிகாரத்தில் கண்ணகிக்கு இமயத்தில் இருந்து கல் எடுத்து கோவில் கட்டியதை அறிகிறோம்.வீரர்களைப்போலவே புகழோடு மதித்த பெரியவர்களும், பெண்களும் தெய்வமாக மதித்து வணங்க பெற்றனர்.   . 

நடுகல் பற்றி தொல்காப்பியம் 

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்தகு மரபில் பெரும்படை வாழ்த்தலென்று

இம்மூன்று மரபிற் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே

தொல்.பொருள்.புறத்தினையியல்.63 

புறநானூற்றில் நடுகல்

ஒளிறு எந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்தெனக்

கல்லே பாவின் அல்லது

நெல் உகத்துப் பரவும் கடவுளும் இலவே.(புறம்.335..10-12)

போர்க்களத்தில் யானையைக் கொன்றுவிட்டு மாண்ட வீரனுக்கு நட்ட கல்லைத் தெய்வமாக வணங்குவதைத் தவிர வேறு யெய்வம் இல்லை என்றார் மாங்குடிகிழார்.

நடுகல்லுக்கு நாள்தோறும் பூசை நடத்தப்படும்

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்

புடைநடு கல்லி னாட்பலி யூட்டி

நன்னீ ராட்டி நெய்நநறைக் கொளீஇய 

மங்குன் மாப்புகை  மறுகுடன்  கமழும் (புறம் 329 -:1-4)

நாள்தோறும் நடுகல்லுக்கு நல்ல தண்ணீர்ல் அபிஷேகஞ்

செய்து நெய்விளக்கு ஏற்றி , கள்ளைப் படைத்து  வாசனை தூபங்காட்டும்போது புகை வீதியில் சூழ்ந்துகொள்ளும்.

நடுகற் பீலி சூட்டி நாரரி 

சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ.(புறம்232:3-4)

அதியமானின் நடுகல்லுக்கு நாள்தோறும் கள் படைக்கப்பட்டது . 

அகநானூற்றில் நடுகல்

அரம்போழ் நுதிய வாளி அம்பின் 

நிரம்பா நோக்கின் நிரையங் கொண்மார்

நெல்லி நீளிடை எல்லி மண்டி

நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் 

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் 

பீலி சூட்டிய  பிறங்குநிலை நடுகல்

வேலூன்று பலகை வேற்றுமுனை  கடுக்கும்.

                 நோய்பாடியார், அகம் . 67: 5_11

வீளை அம்பின் விழத்தொடை மழவர்

நாளா உய்த்த நாமவெஞ் சுரத்து 

நடைமெலிந் தொழிந்த சேட்படர் கன்றின் 

கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர் 

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்  

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் 

வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும் .

                    மதுரை மருதனிள நாகனார்  , அகம் . 131:6_12

செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட 

    கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே . 

                        மலை. 388  - 389

அயலார் வந்து கவர்ந்து சென்ற பசுக்களை மீட்கச் சென்ற  வீரன் போரில் மாண்டான் . அவனூடைய பெயரையும்  பெருமையையும் எழதி நட்ட வீரக்கல் காட்டில் வழிகளில்  இருக்கும்  அக்கல்லின் பக்கத்தில் வேலூம்,கேடயமும்  நட்டிருக்கும்.இதை பின்வரும் கல்வெட்டு செய்தியும் உறுதிபடுத்துகிறது. செங்கம் வட்டம் சாத்தனூரில் வேடியப்பன் கோயிலில் கி.பி 911 – ல் செதுக்கப்பட்ட முதலாம்  பராந்தக சோழன்  கல்வெட்டில் , கோப்பரகேசரி பன்மக்கு யாண்டு  நான்காவது  வேட்டுவதி அரையர் வாணகோவரையர்  ஆள் ஆனைமங்கலம்  முடைய கள்ளன்  தாழன் மேல் கோவல்லூர் நாட்டு அளவிப்பாடி தொறு மீட்டுபட்டான் மன்றாடி கல்  என்று சொல்லப்பட்டிருக்கிறது . (செங்கம் நடுகற்கள் தொடர் எண் : 1971 / 39)

மக்கள் நடு கல்லைத் தொழுவார்கள் .

சிற்றூரில் ஒருத்தி நடுகல்லைத் தொழது , நான் விருந்தினரை வரவேற்று உபசரிக்க  வேண்டும். என் தலைவனும்  வேந்தனும் மாற்றார்  ஊரிலிருந்து  கொண்டிப் பொருளைக் கொண்டுவரப் பெரும் பகைமை யுண்டாக வேண்டிக் கொண்டாள் (புறம் .306) . சங்க இலக்கியங்கள் வீரர்களூக்கு எடுக்கபட்ட நினைவுச் சின்னங்களைப் பதுக்கை நடுகல்  நெடுகல் என்றும் கூறூகின்றன.வீரனின் நினைவாக நட்டகல் நடுகல் என்று பெயர் பெற்றது  ஒசூர் அருகில் 90 நடுகற்கள்  ஒரே  இடத்தில் உள்ளன . இதை தொட்டவர் குடி என்று இப்பகுதி  மக்கள் கூறுகின்றனர் . தொட்டவர் குடி என்றால் இறந்த வீரர்களின் கேயில் என்று கன்னடத்தில் பொருள் உள்ளது . 

ஐயூர் முடவனார் பாடலில் ஒரு ஊரில் பல நடுகற்கல் இருந்ததாக கூறூகிறார் .

 இன்றைய நடுகல்வழிபாடு 

தற்போது தகடூர் பகுதியில் நடுகல்லை பல பெயர்களில் அழைகின்றனர். வேடியப்பன் கோயில் , வேடன் கோயில் , ஐயனார் அப்பன் கோயில் , சிலைகல் , வேடியப்பன்கல், கிருஷ்ணாரப்பன் கோயில் , முனியப்பன் கோயில் போன்ற பெயர்கள் உள்ளன . இவைகளுடன் அந்தந்தப் பகுதியில் அமைப்பிற்கு ஏற்ப நொண்டி வேடியப்பன்,ௐட்டைவேடியப்பன்,முனியப்பன்,ஐயனார் அப்பன் எனும் சொல்வழக்குகள் காணப்படுகின்றன. இவற்றில் வேடியப்பன் , முனியப்பன், அய்யனார் அப்பன் ஆகிய பெயர்கள் அதிக அளவில் பயண்பாட்டில் உள்ளன.

நடுகற்கள் அமைப்பு

சில நடுகற்கள் தனியாக மேடான பகுதிகளில் உள்ளன . பல நடுகற்களைச் சுற்றிலும் வீடு போன்ற அமைப்பில் கல்வீடு அமைக்கபட்டுள்ளது . வீரனின் உருவம் உள்ள கற்பலகை மோற்குப் பக்கதிலும் , மற்றத் திசைகளான வடக்கு , தெற்கு திசையில் இரணாடு  பலகைக் கற்களை அமைத்து இதன்மேல் மூடுகல் ஒன்றை வைத்து மூடி கற்கோவிலாக அமைக்கப்பட்டுள்ளது . பெரும்பாலான நடுகற்கள் இவ்வமைப்பிலே உள்ளன  . மற்றொரு வகை கிழக்குப்பக்கம் நூழைவாயில் போன்று திறந்த வெளியாக அமைக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் கிழக்கு நேக்கி  அமைந்திருக்கும்.சில இடங்களில் உள்ளவை ஒரு கல்வீட்டை மையமாக்கொண்டு மற்றத் திசைகளிலூம் அமைக்கப்பட்டுள்ளன . பட்டினப்பாலை,நடுகல்லைச் சுற்றிலூம் அரன் போன்று  வேலும் கேடயமும் நடப்பட்டிருந்தன என்று  கூறுகின்றது . மலைகள் நிறைந்த வழியில் நடுகற்கள் உள்ளன.இதில் கடவுள் உறைகின்றார் என்ற நம்பிக்கை  இருந்த்தை  மலைபடுகடாம் கூறுகின்றது .பெரும்பாணாற்றுப்படையில் குலத்தலைவன் ஆநிரைகளை காக்க மறவர்,மழவர்களை வைத்திருந்தான் என்று வருகிறது இதைபோல் மலைபடுகடாம் பாடலிலும் காணப்படுகிறது . நடுகற்கள் அதியர் ,மலையமான்,நன்னன் ஆகியமரபினர்களிடையே இருந்தது.என்பதை இலக்கியங்கள் கூறுகின்றன.மற்ற மரபினர்களிடையே இந்த வழக்கம் இருந்ததாக கூறப்படவில்லை . தகடூர்,திருவண்ணாமலை,செங்கம்,அரூர்,ஊத்தங்கரை,கிருட்டிணகிரி ஒசூர் பகுதிகளில் நடுகற்கள் அதிக அளவில் உள்ளள . இப்பகுதியில் இருந்த சங்ககால அரச மரபினர்கள் அதியர், நன்னன்,மலையமான் போன்ற அரசமரபினர்கள் ஆவர். பல்லவர்,கங்கர்,பாணர் போன்றவர்களின் பெயருடன் கூடிய நடுகற்கள் கிடைக்கின்றன.

தாழி வகை பயன்படுத்திய தஞ்சை , திருச்சி , மதுரை போன்ற பகுதியில் அதிகம் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இல்லை . எனவே தாழியை ஈமச்சின்னமாகக் கொண்ட சமுகப் பிரிவினர்களிடையே நடுகல் வழக்கம் இல்லை என்பது தெரிகின்றது .சான்று (பாண்டிமாதேவி , ஆவி முதல் ஆண்டவன் வரை , பாவலர் பண்ணை , முத்துராமலிங்கபுரம்)

  

       சங்க காலத்தில் நடுகற்களை வழிப்பட்டது போன்று இன்றும்  வழிபடுகின்ற வழக்கம்  பரவலாக்க் காணப்படுகின்றது என்பது கள ஆய்விலிருந்து தெரியவருகிறது.தகடூர்,வட ஆர்காடு மாவட்டங்களில்  நடுகற்களை வழிவழியாக வழிபடுகின்ற வழக்கம் உள்ளது.இதனைப் பொங்கல்  மற்றும் ஆடிபெருக்கு போன்ற  நாட்களில்  வழிபடுகின்றனர்.பொங்கலில் முதலில் ஆன்றோர் வணக்கம் எனப்படும் நடுகல்லை வழிபட்ட பின்னர்தான் மற்றக் கடவுள்களை வழிபடுகின்ற வழக்கம் காணபடுகிறது.பொங்கல் நாள் அன்று மாலையில் நடுகல்லை வழிபடுவர்.அன்று நடுகல்லின்  அருகில் பொங்கல் வைத்து, படைத்து, கோழி,ஆடு போன்றவற்றை பலியிடுவார்கள் . மது வகைகளையும் படைப்பது வழக்கம். இந்த நாட்களில் நேர்திக் கடனாக மண்ணால் செய்த சுடப்பட்ட பொம்மைகளையும் சூலத்தையும் வைப்பார்கள் . நடுகல்லை வழிபடுவர்கள் வெளியூரில் இருந்தாலூம் அந்நாளில் இங்கு வந்து தங்கி வழிப்பட்டுச் செல்வர். இந்த நடுகல்லை ஒரு குறிப்பிட்ட இரத்த உறவு கொண்டவர்கள்  மட்டும் வழிபடுகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் தீபவிளக்கு ஏற்றி வைப்பது  வழக்கமாகவும் இருந்து வருகின்றது.

முடிவுரை

தமிழ் இலக்கியம் கிடைத்த காலத்தில் இருந்து       இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ கலச்சாரமாற்றம் நிகழ்தும் நடுகல் வழிபாடு இன்றும் தொடர்வது தமிழரின் அடையாளத்தை நிலைநிறுத்துவதாக.உள்ளது..

அடிக்குறிப்புகள் 

1 சங்க இலக்கியம். எட்டுதொகையும் பத்துபாட்டும்  

2 நா. வானமாமலை , நடுகற்களும் நம்பிக்கைகளும் ,   

3 வெ . கோசவராஜ் , தென்னிந்திய வீரக்கற்கள் – ஒர் ஆய்வு , (முனைவர் பட்ட ஆய்வேடு) கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்1985 ப.310. 

4 தமிழத் தொல்லியலும் வரலாறும்(தகடூர் பகுதி) தி. சுப்பிரமணியன்.  

5 செங்கம் நடுகற்கள் , எண் ,1972/73



 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக